திங்கள், 7 செப்டம்பர், 2015

“வலைப்பதிவர் திருவிழா-2015” நல்ல சில ஆலோசனைகள்


நமது வலைப்பதிவர் திருவிழா நிகழ்வு சிறக்க நல்ல யோசனைகளைத் தெரிவிக்கக் கேட்டிருந்தோம்... 

பலரும் நல்ல நல்ல யோசனைகளைச் சொல்லி வருகிறார்கள்.. நண்பர் ஒருவர் -அவர் ரொம்ப அடக்கம், தன் பெயரைக் கூடச் சொல்ல வேண்டாம் என்று- சொன்ன ஒரு யோசனை-


வலைப்பதிவர் 
புத்தகக் கண்காட்சி &
விற்பனைக் கூடம் 
ஒன்று வைத்தால் என்ன?

அட! இதில் குறும்படங்களையும் சேர்த்துக்கொள்ளலாம் அல்லவா துளசிதளத்தார், குடந்தை சரவணன் அவர்களே

ஏற்கெனவே எத்தனை ஆண்டுக்கு முன்னதாக வெளியிட்டு இருந்தாலும் அவர் நம் வலைப்பதிவர் எனில், அவர்களின் புத்தகங்களை விழாவிற்கு வரும் அனைவரும் அறியச் செய்வது இருதரப்பிலும் எவ்வளவு மகிழ்ச்சியைத் தரும்?

இது பற்றிய நம் வலை-எழுத்தாளர் கருத்துகளைத் தெரிந்து அதுபற்றிய செயல் திட்டத்தை உருவாக்குவோம்!

புத்தகப் பிரதிகள் இருந்தால் 
விழா சிறப்புத் தள்ளுபடியுடன்- 
விழா அரங்கில் 
தனிக்கடை போட்டு,
விற்பனையும் செய்வோம்!

ஒருவேளை நூல் படிகள் இல்லாவிட்டால், அதுபற்றிய தகவல்களை வருவோரறிய கவிதைக் கண்காட்சி அருகில் 
ஒரு விளக்கஅட்டை எழுதி, காட்சிக்கு வைத்துவிடுவோம்!

ஒரே நிபந்தனை வலைப்பதிவரே நூலாசிரியராக இருக்க வேண்டும். அப்போதுதான் அதை வலைப்பதிவர் புத்தகக் கண்காட்சி விற்பனை” எனலாம்! (வாங்குவோர்க்கு சிறப்புத் தள்ளுபடியுடன்)

ஆமா..! பிறகு பதிவரின் சித்தப்பா பெரியப்பா கொழுந்தியா ஓர்ப்படியா என்று கிளம்பிவிடக் கூடாது. எனில் அப்படி வரும் நூல்களைப் பக்கத்திலேயே அமைக்கத் திட்டமிட்டு பொதுவான அனைத்துப் பதிப்பகங்களின் புத்தகங்களும் கிடைக்கும்படியான  கடை ஒன்றும் போட்டு அதில் இதையும் போட்டு விடலாம் வெறென்ன செய்யலாம்?)

இதுபற்றிய கருத்துகளை 
எழுத்தாளராக நூலாசிரியராக இருக்கும் 
நம் பதிவர்கள் மட்டுமல்ல 
புத்தகக் காதலர்களும் தெரிவித்தால் செயல்படுத்தலாமே
(எதிர்கால நூலாசிரியரா நீங்கள்
அப்ப நீங்களும் வாங்க வாங்க!)

எங்கே ... பார்க்கலாம் ... 
------------------------------------

ஆலோசனைகள் பல –
இந்த யோசனைகள் நம் நண்பர் –தற்போது சிங்கையிலிருக்கும் திரு. மு.கோபி சரபோஜி அவர்கள் தெரிவித்தவை – அவரது கடிதம் இது

அன்புடையீர்,  வணக்கம்.வலைப்பதிவர் திருவிழா 2015  - சிறப்பாய் நடந்தேற வாழ்த்துகள். அதற்கென உழைத்து வரும் நண்பர்களுக்கு  அன்பும், பிரியங்களும்.
நிற்க - இந்நிகழ்வு சார்ந்து சக வலைப்பதிவர் என்ற முறையில் என் சில யோசனைகளை இணைத்துள்ளேன். சாத்தியங்கள் இருப்பின் பரிசீலியுங்கள். 

(1)  நான் மூத்த வலைப்பதிவர் எனக்கு முக்கியத்துவம் தரவில்லை என விழா நாளிலோ அதற்குப் பின்னரோ வரும் ஓலைக்கீற்று விமர்சனங்களைத் தவிர்க்க வலைப்பதிவர் அறிமுகத்தை அகர வரிசைப்படி செய்யலாம்.
(இதற்கு எமது கருத்து – இது அனைத்து வலைப்பதிவரும் காலை9மணிக்கு விழாத் தொடங்கும்போதே வந்திருக்க வேண்டும். சாதாரணமாக 9மணிக்குப் பாதிஅரங்கு நிறைந்தாலே பெரியவிடயம். மாவட்ட வாரியாக அழைப்பதிலும் இதனாலேயே சிக்கல் எழுகிறது. எனவே, வயது வித்தியாசமின்றி காலை 9மணிக்குள் வரும் பதிவர் பதிவுசெய்யும் வரிசையிலேயே 5,5பேராக மேடைக்கு அழைத்து சுய அறிமுகத்தைத் தொடங்கும் வழக்கத்தை மாற்றவேண்டியதில்லை)

(2) வலைப்பதிவர்களுக்கு தரும் தமிழ் வலைப்பதிவர் கையேட்டில் வலைப்பதிவர் சார்ந்த விபரங்கள், விளம்பரங்கள் மட்டுமில்லாமல் வலைப்பதிவர்களுக்கு உதவக்கூடிய தொழில் நுட்பம் சார்ந்த விசயங்களையும், வலைப்பக்கங்களை மேம்படுத்தக் கூடிய டிப்ஸ்களையும் இடை இடையே சேர்க்கலாம். இப்படிச் செய்தால் வலைப்பதிவர் கையேடு டெலிபோன் டைரக்டரி தன்மையில் இல்லாமல் இருக்கும்.
  (எமது கருத்து – இது மிகச்சிறந்த கருத்து. ஏற்கெனவே நம் கையேடு தயாரிப்பின்போதே இந்த யோசனையும் சொல்லப்பட்டுள்ளது. திரு திண்டுக்கல் தனபாலன், திரு மதுரை பிரகாஷ் ஆகிய நம் வலை நுட்ப வல்லுநர்களிடம் கேட்டு வலைநுட்பக் குறிப்புகள்(டிப்ஸ்), மற்றும் மிகச் சில கட்டுரைகளைச் சேர்த்து வெளியிடலாம் என்பது நல்லதே)

(3) எந்த தலைப்பு சார்ந்ததாகவும் இருக்கலாம். ஆனால். பயன்படுத்தக் கூடிய வகையில் சேதாரமில்லாமல் இருக்க வேண்டும் என்ற நிபந்தனையோடு விழாவிற்கு வரும் வலைப்பதிவர்கள் குறைந்தது ஒரு புத்தகம் அதிக பட்சம் அவரவர் விருப்பம் போல அவர்கள் எழுதிய நூல்களையோ அல்லது மற்றவர்களின் நூல்களையோ விழாக்குழுவிடம் இலவசமாகத் தரக் கோரலாம். இப்படிச் சேகரித்த நூல்களை தாய் தமிழ்பள்ளி உள்ளிட்ட அரசுப் பள்ளிகளுக்கு இலவசமாக வழங்கலாம்.
  (எம் கருத்து –இதை மகிழ்ச்சியோடு செய்யலாம். நூல் வெளியிட்டு கையில் பிரதிகள் வைத்திருக்கும் பதிவர்கள் மனமுவந்து தரும் நூல்கள், குறும்படப் பிரதிகளைச் சேகரித்து, நல்லதொரு அரசுப் பள்ளிக்குத் தரும் யோசனை மிக இனியது, செய்யலாம்)

(4) வலைப்பதிவர்கள் கூட்டாகவோ அல்லது தனிப்பட்ட முறையிலோ பள்ளிகளுக்கு வழங்கும் நூல்களை வரிசைப்படுத்தி வைப்பதற்கான நூலக அடுக்குகளை வாங்கித் தரக் கேட்கலாம். இதற்கென உதவிக்கரம் நீட்டிய வலைப்பதிவர்களை விழா மேடையில் கெளரவிக்கலாம்.
  (கருத்து – இதுவும் இனிய யோசனையே, முன்வந்து தருவோர் கௌரவிக்கப்படுவதில் எமக்கு மாற்றுக் கருத்தில்லை-நேரம் கவனம்)

(5) வலைப்பதிவு சார்ந்த தொழில் நுட்பக் கட்டுரைகளையும், செய்திகளையும் தாங்கி வரும் வகையில் வலைப்பதிவர்களுக்கென ஒரு அச்சு இதழைக் கொண்டு வரும் யோசனையை முன் வைக்கலாம். அதற்கான நிதியை உள்நாட்டு வலைப்பதிவர்களை சந்தாதாரார் ஆக்குவதன் மூலமும், அயல்நாடுகளில் இருக்கும் வலைப்பதிவர்களை நிர்ணயிக்கப்பட்ட தொகையின் மூலம் புரவலர்களாகப் பங்கு கொள்ளச் செய்வதன் மூலமும் திரட்ட முடியும்.  
  (–இது தற்போது சாத்தியமா என்று தெரியவில்லை. நம் பதிவர்களிடம் ஆர்வமிருக்கும் அளவுக்கு செயல்திட்டம் இருப்பதாக நாம் நினைத்துக் கொள்வது ஏமாற்றத்தில் கொண்டுபோய் விடாமல் பார்த்துக் கொள்ளவேண்டும்... செய்ய வேண்டியதுதான் ஆனால்...?)

(6) அரசியல் சாராமல் கல்வி, சுற்றுச்சூழல் உள்ளிட்ட பொது விசயங்களில் பங்கு கொள்ளும் வகையில் வலைப்பதிவர்களை ஒரு குழுவாக ஒருங்கிணைப்பதற்கான முயற்சிக்கு வடிவம் தரலாம்.
   (இதுவும் நம் கனவுத் திட்டம்தான்... அடுத்த நூற்றாண்டில் சாத்தியமாக வாய்ப்பிருக்கிறது... என்ன கோபி? விட்டா கட்சியே ஆரம்பிக்கலாம்னு சொல்லுவீங்க போல..நம்ம பதிவர்களில் சிலர் படுத்தும் பாடுகளில் நொந்துபோய் எழுதுவதை விட்டவர்களிடம் நீங்கள் பாடம்கேட்கணும் அதீத நம்பிக்கை ஆற்றாமையைத் தந்துவிடும் ஆபத்து உள்ளது. உள்ள நிலைமைக்கேற்ப அடுத்த கட்டம் பற்றி யோசிப்பதே நல்லது. ஜம்ப் பண்ண நினைப்பது வலையுலகில் நல்லதல்ல என்பதே நம் கருத்து.)
-----------------------------------------------
ஆலோசனைகள் பலவும் நல்லதாகவே படுகின்றன.
பதிவர் நண்பர்களின் கருத்தறிந்து இவற்றில் இயலுமானவற்றைச் செயற்படுத்தலாம் என்று விழாக்குழு கருதுகிறது. 
உங்கள் கருத்துகளைப் பின்னூட்டத்தில் தெரிவிக்க வேண்டுகிறோம்.
--அன்புடன், விழாக்குழு,
“வலைப்பதிவர் திருவிழா-2015“ புதுக்கோட்டை

-----------------------------------------------------------

பிரபல வலைப்பதிவர் மதுரைத் தமிழனின் யோசனைகள்...
(அடுத்து வரும்...)
மேலும், நமது விழாப்பற்றிய விரிவான தகவலை நம் தளத்திலிருந்தே எடுத்துவழங்கியிருக்கும் 
தில்லைஅகத்துத் தளம் துளசிதரன், கீதாவுக்கு உளமார்ந்த நன்றி 
http://thillaiakathuchronicles.blogspot.com/2015/09/BloggersMeet-2015-Information.html அத்தோடு,


“புதுக்கோட்டையில் சங்கமிக்க வாங்க தோழமைகளே ! என்று

விழா விவரங்களை எடுத்து விளக்கி எழுதியிருக்கும் திரு பிரகாஷ்


போகுமிடம் களைகட்டுது!–என்று, அமெரிக்காவில் இருந்து - புதுக்கோட்டைக்கு அழகாக வரவேற்றிருக்கும் சகோதரி கிரேஸ்

ஆகிய நம் வலையுலகச் சொந்தங்களுக்கு நெஞ்சம்கலந்த நன்றிகள்.
---------------------------------------

7 கருத்துகள்:

  1. 01. //காலை 9மணிக்குள் // இதை இதை தான் எதிர்ப்பார்த்தேன்...

    02. // வலைப்பதிவர்களுக்கு உதவக்கூடிய தொழில் நுட்பம் சார்ந்த விசயங்களையும், வலைப்பக்கங்களை மேம்படுத்தக் கூடிய டிப்ஸ்களையும் இடை இடையே // அதற்கான வேலைகள் தான் செய்து கொண்டு இருக்கிறேன்...

    03. // தாய் தமிழ்பள்ளி உள்ளிட்ட அரசுப் பள்ளிகளுக்கு இலவசமாக வழங்கலாம். // மிகவும் மகிழ்ச்சி...\

    04. நேரம் முக்கியம்...

    05. கவனத்தில் கொள்ளப்படும்...

    06. நல்லதொரு யோசனை...

    நன்றிகள் பல...

    பதிலளிநீக்கு
  2. பலநல்ல யோசனைகளை தெரிவித்த நண்பர்க்கு நன்றிகள்! பல....

    பதிலளிநீக்கு
  3. விழாக்குழுவிற்கு வந்த யோசனைகளை பொதுவெளியில் பகிர்ந்தமைக்கும், என் யோசனைகளுக்குப் பதில் தந்தமைக்கும் நன்றி.ஆறாவது யோசனை மிகப்பெரிய இயக்கமாக மாறுவதற்கானது அல்ல, வலைப்பதிவர்கள் சமூகம் சார்ந்த செயல்பாடுகளுக்காகவும் வாய்ப்பு கிடைக்கும் போது இணைந்து பங்கெடுப்பதற்கானது மட்டுமே! உங்கள் பதில்களோடு என் வலைப்பக்கத்தில் பதிந்திருக்கிறேன்.(முன் அனுமதி வாங்கினியான்னு காப்பிரைட் பிரச்சனைய கிளப்பிடாதீங்க சாமிகளா!!)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அங்கும் வந்து பார்த்தேன். நிறைய எழுதியிருக்கிறீர்கள்.. இன்னும் தொடர்ந்து எழுதவும் அடுத்தடுத்து நூல்களை வெளியிடவும் எனது இனிய வாழ்த்துகள் நண்பரே.

      நீக்கு
    2. என் வலைப்பக்க வருகைக்கு நன்றி சார். தங்களைப் போன்ற ஆளுமைகளின் ஆசிர்வாதங்கள் இருக்கும் போது சாத்தியமாகும் என்றே தோன்றுகிறது

      நீக்கு
  4. வணக்கம் ...
    ஜம்பர்ஸ் ஷுட் பி சப்போர்டட்
    எனக்கு பல தடைகள் இருப்பதால் நான் நா.மு அளவிற்கு முற்போக்காக எழுதுவதில்லை ...
    அதற்கென முற்போக்காய் சமூக கீழ்மைகளை விமர்சிக்கும் பதிவர்களை ஆதரிப்பது குற்றமாகாது.. என்பது என்னுடுடைய தாழ்மையான கருது கோபி அய்யா நடக்க இயலா விஷயம் ஏதும் சொல்லவில்லை..
    நீங்கள் சொல்வது நிதர்சனம் ...
    அவர் சொல்கிற வேகத்தில் இணையத்தில் எழுதுபவர்கள் மிகவும் குறைவு அரிது...
    அவரது வேண்டுகள் வரலாற்றின் துவக்கமாகக் கூட இருக்கலாம் இல்லையா அண்ணா ? :-)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம் மது. “கோபி அய்யா நடக்க இயலா விஷயம் ஏதும் சொல்லவில்லை.. நீங்கள் சொல்வது நிதர்சனம் ...“ இதுதான் சரி. எனினும் தொடர்ந்து முயல்வோம். கனவுகளின் முயற்சிதானே வெற்றியை ஈட்டும். கனவுகளைப் புதிது புதிதாக முயல்வோம்.

      நீக்கு

Related Posts Plugin for WordPress, Blogger...