செவ்வாய், 13 அக்டோபர், 2015

பதிவர் விழா -செய்திச் சுருக்கம்





உலகத்தை இணைக்க இணையத்தமிழ் வளரவேண்டும்
அழகப்பா பல்கலைக்கழகத் துணைவேந்தர் சொ.சுப்பையா


புதுக்கோட்டை அக்.13
  உலகத்தை இணைக்கும் இணையத்தமிழ் வளரவேண்டும் இந்தப் பணியில் ஈடுபட்டுள்ள கணினித் தமிழ்ச்சங்கத்திற்கு பல்கலைக்கழகம் துணைநிற்கும் என்றார் அழகப்பா பல்கலைக் கழகத் துணைவேந்தர் முனைவர் சொ.சுப்பையா.
புதுக்கோட்டை  ஆரோக்கிய மாதா மக்கள் மன்றத்தில் நேற்றைய தினம் நடைபெற்ற நான்காம் ஆண்டு வலைப்பதிவர் திருவிழா-2015நிகழ்விற்குத் தலைமையேற்று, உலகளவில் பல்வேறு நாடுகளில் இருந்தவாறே தமிழில் வலைப்பக்கம் வைத்து எழுதிவருவோர் யார் எவர் எனும் விவரங்களைக் கொண்ட உலகத் தமிழ் வலைப்பதிவர் கையேடுநூலை வெளியிட்டுச் சிறப்புரையாற்றிய சொ.சுப்பையா  மேலும் பேசியதாவது
     “தமிழ் தன்னை மேலும் மேலும் வளப்படுத்திக்கொண்டு வருகிறது. தமிழாகள் நாம்தான், தமிழ்வழியாக உலகத்தை இணைக்கும் பணியைச் செய்ய வேண்டும். அதற்கு, வளர்ந்துவரும் இணையத் தமிழைப் பயன்படுத்த கற்கவேண்டும். அதற்கான பயிற்சியை அனைவரும் குறிப்பாக இளைஞர்கள், மாணவர்கள்- மேற்கொள்ள வேண்டும். இதுபோலும் பயிற்சியினைத் தமிழ்இணையக் கல்விக் கழகத்துடன் இணைந்து நடத்த அழகப்பா பல்கலைக்கழகம் துணைநிற்கும்என்றார்.
புதுக்கோட்டையில் பணியாற்றிய போது, கணினித் தமிழ்ச்சங்கத்தைப் புதுக்கோட்டையில் நிறுவியவரும், தற்போதையவிழவில் கோவை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலருமான முனைவர் நா.அருள்முருகன் அவர்கள் விழாவில் தொடக்கவுரையாற்றினார்.
   தமிழ் இணையக் கல்விக்கழக உதவி இயக்குநர் முனைவர் மா.தமிழ்ப்பரிதி இவ்விழாவை ஒட்டி உலகளாவிய அளவில் நடத்தப்பட்ட ஆறுவகையான போட்டிகளில் வெள்றிபெற்ற படைப்பாளிகளுக்கு ரொக்கப் பரிசையும் வெற்றிக் கேடயங்களையும் வழங்கிப் பேசும்போது, இணையத் தமிழ் வளர்ச்சிக்காகத் தமிழக அரசு செய்துவரும்  பணிகளை, இணையத்தமிழ்ப் பயிற்சி, இணைய நூலக வளர்ச்சி, மின்னூலாக்கும் வழிமுறைகள் போன்றவற்றை அனைவரும் பயன்படுத்தித் தமிழ்வளர்ச்சியோடு இணைந்த தமிழ்ச்சமூக முன்னேற்றத்திற்கு அனைவரும் பாடுபட முன்வரவேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
கணினி, சூழல், பெண்ணியம் தொடர்பான கட்டுரைப் போட்டிகளில் அமெரிக்கா, கனடா, ஜெர்மனி, சிங்கப்பூர், அரபு நாடுகளைச் சேர்ந்தவர்கள் பரிசுபெற்றதும், இதில் புதுக்கவிதைப் போட்டியில் புதுக்கோட்டைக் கவிஞர்கள் செல்வா முதற்பரிசும், வைகறை மூன்றாம் பரிசும் மரபுக் கவிதைப் போட்டியில் கவிஞர் மகா.சுந்தர் இரணடாம் பரிசும் பெற்றது குறிப்பிடத் தக்கது. மொத்தம் அறுபதாயிரம் ரூபாய் ரொக்கப்பரிசு வழங்கப்பட்டது.
விக்கிமீடியாவின் இந்திய ஒருங்கிணைப்பாளரும் புதுக்கோட்டையைச் சேர்ந்த இளைஞருமான அ.இரவிசங்கர், கவிஞர் வைகறையின் நநதலாலா இணைய மாதஇதழை வெளியிட்டுச் சிறப்புரையாற்றினார். அவர் பேசும்போது, உலகளாவிய தகவல் களஞ்சியமான விக்கியில் ஆங்கிலத்திற்கு உள்ள வசதிகளைத் தமிழிலும் பெறவேண்டுமானால், நாம் இன்னும் கூடுதலான தகவல்களைத் திரட்டித்தர முன்வரவேண்டும். கட்டுரையில் தருவதைக் கவிதை, கதைகளில் தர முடியாது. தகவல் திரட்டும்போது அனைத்தும் தமிழில் கிடைப்பதை உறுதிப்படுத்தினால் தமிழ் தானே வளரும் ஆகவே, விக்கிபீடியா தளத்தில் அனைவரும் பங்களிக்கும் பயிற்சியைப் பெற முன்வரவேண்டும் என்றார்.

    நிறைவுரையாற்றிய பிரபல எழுத்தாளர் எஸ.ராமகிருஷ்ணன் பேசும்பொழுது,
பத்திரிகைகளில் வரும் படைப்புகளின் தன்மை வேறு, இணையத்தளத்தில் பதிவு எழுதும் எழுத்துகளின் தன்மை வேறு. அச்சிட்ட பத்திரிகை, புத்தகங்களை ஒரு பிரதியை ஒரே நேரத்தில் ஒருவர்தான் படிக்க முடியும். ஆனால், மின்-நூல்களை ஒரே நேரத்தில் உலகம் முழுவதும் உள்ளவர்கள் பார்க்கிறார்கள். ஒரு புத்தகம் ஆயிரம் பிரதிகள் விற்க தமிழ்நாட்டில் ஒருசில ஆண்டுகளாகின்றன. ஆனால், மின் நூல்களைப் பதிவிறக்கம் செய்ய வைத்தால் ஒருசில நாள்களிலேயே உலகமெல்லாம் அந்த நூல் பிரபலமாகிவிடும். புகழ்பெற்ற எழுத்தாளர் எழுதினால்தான் படைப்புகள் பிரபலமாகும் என்பது இன்றைக்கு மாறிவருகிறது. சிறுகதை, கவிதை, எந்த முன் அனுபவமும் இல்லாதவர்கள் நேரடியாக எழுதிய நாவல்கள் இப்போது உடனுக்குடன் பிரபலமாவது இணையத்தால் சாத்தியமாகி வருகிறது. எனவே, எழுத்தாளர்கள் இந்த இணையத்தைப் பயன்படுத்தி தமது படைப்புகளை உலகறியச் செய்ய முன்வரப் பயிற்சி பெற வேண்டும் என்றார்.
விழாவில் கரந்தை ஜெயக்குமார் எழுதிய வித்தகர்கள்எனும் நூலும், மலேசியாவைச் சேர்ந்த தவ.ரூபன எழுதிய ஜன்னல் ஓரத்து நிலாஎனும் நூலும் வெளியிடப் பட்டன.
   கணினித் தமிழில் பிழை திருத்தம் செய்யும் நாவிமற்றும் வாணிஎனும் மென்பொருள்களைக் கண்டுபிடித்த இளைஞர் மதுரையைச் சேர்ந்த ராஜாராமன் எனும் நீச்சல்காரன் ,புதுக்கோட்டை ஞானாலயா நூலக நிறுவனர் கிருஷ்ணமூர்த்தி, சர்வஜித் அமைப்பின்வழி, அனாதைப் பிணங்களை அடக்கம் செய்துவரும் மருத்துவர் ராமதாஸ், புதுக்கோட்டையைச் சேர்ந்த திரைப்படக் கவிஞர் இரா.தனிக்கொடி ஆகியோர் விழாவில் கௌரவிக்கப்பட்டனர்.
ஆலங்குடியைச் சேர்ந்த ஓவியர்களின் கைவண்ணத்தில் வலைப்பதிவர்களின்  கவிதை ஓவியக்கண்காட்சி பார்வையாளர்களைக் கவர்ந்தது.
   முன்னதாக காலை 8மணியளவில், “விதைக்-கலாம்எனும் அமைப்பின் இளைஞர்கள் மக்கள் மன்ற வளாகத்தில் மரக்கன்றுகளை நட்டதில் இருந்து விழா நிகழ்ச்சிகள் நேரலை ஒளிபரப்புடன் துவங்கின.
விழாவில் 11ஆம் வகுப்பு மாணவி சுபாஷினியின் தமிழிசைப் பாடல்களைக் கேட்ட அமெரிக்க தமிழ்ப்பதிவர் விசுஆசம் என்பவர் உடனடியாகப் பாராட்டுகளைத் தெரிவித்து, தமது சுட்டுரையில் அந்தப் பாடலுக்கு ஒருமணிநேரத்திற்குள் உலகம் முழுவதிலுமிருந்து சுமார் 300 பேர் பாராட்டியதை விழாவிலேயெ அறிவித்தது புதுமையாக இருந்தது.
    சென்னைப் புலவர் ச.இராமாநுசம், மதுரையைச் சேர்ந்த சீனா என்கிற சிதம்பரம் முதலான மூத்த பதிவர்கள் விழாவில் கௌரவிக்கப்பட்டனர்.
   உணவுக்குழுத் தலைவர் இரா.ஜெயலட்சுமியின் தலைமையில் மாநிலம் முழுவதுமிருந்து வந்திருந்த தமிழ்வலைப்பதிவர் அனைவர்க்கும் சுவையான மதிய உணவும் இனிமையான மாலைச்சிற்றுண்டியும் வழங்கப்பட்டது.
விழா ஒருங்கிணைப்பாளர் கவிஞர் நா.முத்துநிலவன் வரவேற்க, நிதிப் பொறுப்பாளர் கவிஞர் மு.கீதா நன்றி கூறினார்.
   இந்நிகழ்ச்சியை நேரலையாக உலகின் 22 நாடுகளைச் சேர்ந்த தமிழர்கள் பார்த்து உடனுக்குடன் கருத்துகளைப் பரிமாறியது விழாவில் அறிவிக்கப்பட்டது.
கவிஞர் தங்கம்மூர்த்தி, திண்டுக்கல் தனபாலன், மு.கீதா, ஜெயலட்சுமி, பொன்.கருப்பையா.,வைகறை, செல்வா, மது கஸ்தூரி ரெஙகன், ஸ்ரீமலையப்பன், கார்த்தி, அ.பாண்டியன், உள்ளிட்ட 25க்கும் மேற்பட்ட விழாக்குழுவினர் ஏற்பாடுகளைச் சிறப்பாகச் செய்திருந்தனர்.
   அமெரிக்காவிலிருந்து ஒருவர் விழாவில் கலந்துகொண்டதோடு, புதுதில்லி, கேரளா, கர்நாடகா, ஆந்திரா மற்றும் தமிழ்நாட்டின் பல்வேறு நகரங்களிலிருந்தும் இணைய எழுத்தாளர்கள் பங்கேற்றது குறிப்பிடத்தக்கது.
   விழா நிகழ்ச்சிகளை ஒருங்கிணைத்த விழாக்குழுவினர், இணையத் தமிழ்ப் பயிற்சி மீண்டும் விரைவில் நடக்கவுள்ளதாகவும், இது தொடர்பாக ஆர்வமுள்ள எழுத்தாளர்கள் கல்லூரி மாணவர்இளைஞர்கள்  muthunilavanpdk@gmail.com எனும் மின்னஞ்சலிலோ, 94431 93293 எனும் செல்பேசி வழியாகவோ தொடர்புகொள்ளலாம் என்று தெரிவித்தனர்.

-----------------------------------------
இச்செய்தியின் சுருங்கிய வடிவத்தை வெளியிட்ட
இன்றைய (13-10-2015) தினமணி நாளிதழ் திருச்சிப்பதிப்பு,
தினமலர் நாளிதழ் திருச்சிப்பதிப்பு, 
தி இந்து தமி்ழ் நாளிதழ் திருச்சிப்பதிப்பு, 
செய்தியாளர்களுக்கு நன்றி.
அப்படியே வண்ணப்படங்களுடன் வெளியிட்ட
“புதுகை வரலாறு“ நாளிதழ் ஆசிரியர்க்கும்.
கடைசிப்பக்கத்தில் அனைத்துப் பதிப்பிலும் வெளியிட்ட 
தீக்கதிர் நாளிதழ் ஆசிரியர் குழுவிற்கும்,
புகைப்படக் கலைஞர் “டீலக்ஸ்“ஞானசேகரன் அவர்களுக்கும் 
நன்றி நன்றி நன்றி
------------------------------
மற்ற படங்களும் செய்தித் துளிகளும் 
இன்று மதியம் வெளியிடப் படும்
---------------------------------------

11 கருத்துகள்:

  1. ரயில் பதிவு உறுதியாகததினால் நாங்கள் சற்று சீக்கிரமாக திருமிகு எஸ் ரா அவர்களின் பேச்சின் இடையில் செல்ல வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டுவிட்டதால், (துளசி குடும்பத்தினருடன் வந்திருந்ததால்) திங்கள்கிழமை தேர்வு கண்காணிப்பாளராக இருக்க வேண்டிய அவசியமும் இருந்ததால் சென்று விட்டோம். எங்களைத் தயவாய் மன்னிக்கவும் திருமிகு முத்து நிலவன் ஐயா, விழாக் குழுவினர் அனைவரும். அங்கு விடுபட்ட செய்திகளை இங்கு அறிந்து கொண்டோம். எங்கள் பதிவிலும் விடுபட்ட செய்திகள் இங்கு அறியக் கிடைத்தது.

    விழா மிக மிகச் சிறப்பாக நடந்து என்றால் அது மிகை அல்ல. பெரும் வெற்றி என்று சொல்லலாம். முத்துநிலவன் ஐயா அவர்களின் தலைமைப் பண்பு அருமை! பாராட்டியே ஆக வேண்டும். ஐயாவுக்கும் எங்கள் வாழ்த்துகள்! பாராட்டுகள்! அவரது தலைமையில் ஓடி ஓடி உழைத்து விருந்தோம்பி, ஒற்றுமையுடன், ஒருங்கிணைந்து பொறுப்புடன் சிறப்பித்த விழாக் குழுவினர் அனைவருக்கும் பாராட்டுகள்! வாழ்த்துகள்! இந்த நமது நட்பு என்றென்றும் தொடரட்டும்! நன்றி மீண்டும் மீண்டும் பாராட்டுகளுடனும், வாழ்த்துகளுடனும்....

    பதிலளிநீக்கு
  2. விழா மிகச் சிறப்பாக நடந்தது அறிந்து மகிழ்ச்சி. விழாக் குழுவினர் அனைவருக்கும் வாழ்த்துகளும் பாராட்டுகளும்.

    பதிலளிநீக்கு
  3. குழுவில் ஒவ்வொருவரும் நூறு பேருக்குச் சமம் என்ற நிலையில் தேனீ போல சுறுசுறுப்பாகவும், விவேகமாகவும் பணியாற்றிய விதத்தை நேரில் கண்டு வியந்தோம். பின்வரும் வலைப்பதிவர் மாநாடுகளுக்கு இவ்விழாவினை முன்மாதிரியாகக் கொள்ளலாம். அனைவருக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  4. அற்புதமான என்றென்றும் நினவு கூறத் தக்க நிகழ்வு என்று கூறலாம்.
    முர்ஹுநிலவன் ஐயா அவர்களின் தலைமயிலான விழாக் குழுவினருக்கு நன்றியும் பாராட்டுகளும்

    பதிலளிநீக்கு
  5. சிறப்பான விழாவின் செய்திகளை சுருக்கமாகத் தந்தாலும் அருமையாகத் தந்தீர்கள்.

    பதிலளிநீக்கு
  6. அற்புதம் அைனைவருக்கும் நன்றியும் பாராட்டுகளும்

    பதிலளிநீக்கு
  7. மரியாதைக்குரியவர்களே,
    வணக்கம்.
    புதுக்கோட்டை கணினித் தமிழ்ச் சங்கம் நடத்திய வலைப்பதிவர் சந்திப்பு நிகழ்ச்சி மிகவும் சிறப்பாக அமைந்தது.வாழ்த்துகிறோம்.தங்களைப்பின்பற்றி எங்க பகுதியிலும் கணினித் தமிழ் சங்கம் துவக்க உள்ளோம்.
    நன்றிங்க.
    தங்களது கருத்தினை எதிர்பார்க்கும் அன்பன்,
    C.பரமேஸ்வரன்,
    http://konguthendral.blogspot.com
    சத்தியமங்கலம்,
    ஈரோடு மாவட்டம்-638402

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கணினித் தமிழ்ச்சங்கத்தைத் தமது பகுதிகளில் தொடங்க நினைப்போர்க்கு புதுக்கோட்டைக் கணினித் தமிழ்ச்சங்கத்தின் ஆலோசனையும் உதவிகளும் உறுதியாக உண்டு. பேசுவோம். நன்றியும் வணக்கமும்.

      நீக்கு
  8. வருகைக்கும் அற்புதமான பதிவுக்கும் நன்றிகள் அய்யா!

    பதிலளிநீக்கு

Related Posts Plugin for WordPress, Blogger...