வெள்ளி, 2 அக்டோபர், 2015

“பதிவர் திருவிழா-2015” அழைப்பிதழ்! வருக! வருக!



முதலில் ஈரோட்டில் சிறிய அளவில் தொடங்கிய தமிழ் வலைப்பதிவர்களின் சந்திப்பு, சென்னையில் இரண்டுமுறை (2012,2013) நடந்தபின்னரே உலகறியத் தொடங்கியது. நான் 2013இல் சென்னையில் கலந்து கொண்டு வந்தேன்...  
புதுக்கோட்டையில் எங்கள் அய்யா முனைவர் நா.அருள்முருகன் அவர்களின் வழிகாட்டுதலில் “கணினித் தமிழ்ச்சங்கம்“ உருவானது. அதன் வழியே தமிழாசிரியர் நண்பர்களின் ஒத்துழைப்போடு,  இருமுறை “வலைப் பதிவர்களுக்கான இணையத் தமிழ்ப்பயிற்சி முகாம்நடத்தினோம். அதில் சுமார் 50பேர் “வலை“யில் சிக்கினார்கள்! இது ஓர் இன்ப வலையானது!
மதுரையில் கடந்த ஆண்டு நடந்தபோது, ரூ.2,000 நன்கொடை தந்ததோடு, புதுக்கோட்டையிலிருந்து சுமார் 25பேர் சென்று கலந்துகொண்டு வந்தோம்.
இப்போது புதுக்கோட்டையிலேயே...
சென்னையில், “புலவர்குரல்“அய்யா இராமாநுசம் அவர்கள் தலைமையில் நண்பர்கள் மதுமதி, தி.ந.முரளி, சென்னைப்பித்தன், கவியாழி உள்ளிட்ட பலப்பல நண்பர்களின் ஒத்துழைப்பிலும் சிறப்பாக நடந்தேறியது...
மதுரையில், அய்யா சீனா அவர்களின் தலைமையில் ரமணி, தமிழ்வாசி உள்ளிட்ட பல நண்பர்களின் உழைப்பிலும் சிறப்பாக நடந்த விழா இப்போது புதுக்கோட்டையில் “கணினித் தமிழ்சங்க“ நண்பர்களின் கூட்டு உழைப்பில் தயாராகி வருகிறது... ஒரு பெரும் பட்டாளமே உழைத்துக்கொண்டுள்ளது!
இதோ அழைப்பிதழ்!
உலகறிந்த தமிழ் எழுத்தாளர், இன்றும் சலிக்காமல் லட்சக்கணக்கான வாசகர் திரளோடு அடிக்கடி வலைப்பக்கத்திலும் எழுதி வருகிற எழுத்தாளர் எஸ்.ரா. அவர்கள் வருகிறார்கள்!
உலகம் முழுவதும் தேடுபொறியில் கோடிக்கணக்கானோர் தினமும் தேடும் கட்டற்ற தகவல் களஞ்சியமான “விக்கிமீடியா“வின் இந்தியத் திட்ட இயக்குநர் திருமிகு அ.இரவிசங்கர் அவர்கள் வருகிறார்கள்...(இவர்களின் சொந்த ஊர் புதுக்கோட்டை என்பதும் குறிப்பிடத் தக்கது)
புதுக்கோட்டையில் பயின்று, பலகாலம் பணியாற்றி, தற்போது காரைக்குடி அழகப்பா பல்கலைக் கழகத் துணைவேந்தர் பொறுப்புக்குப் பெருமை சேர்த்து வரும் முனைவர் சொ.சுப்பையா அவர்கள் வருகிறார்கள்...
முதன்முறையாக, தமிழ்ப் பதிவர்களோடு இணைந்து, ரூ.50,000 ரொக்கப் பரிசும் அறிவித்து மகிழ்வித்திருக்கும் தமிழ்இணையக் கல்விக கழகத்தின் இணைஇயக்குநர் முனைவர் மா.தமிழ்ப்பரிதி அவர்கள் வருகிறார்கள்...
எங்களையெல்லாம் “வலை“யில் வீழ்த்தி, தமிழ் இணையப் பயிற்சிக்கும் தூண்டி, கல்வி-இலக்கியம்-தொழில்நுட்பம்-தலைமைப் பண்பு-மனிதப்பண்பு எனப் பலப்பல துறைகளில் எங்களுக்குத் தன் செயல்களால் பயிற்சி தந்தவர், தற்போது கோவை மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலராகப் பணிமாறுதல் பெற்றுச் சென்றாலும், இதயத்தால் எங்களுடனே எப்போதும் இருக்கும் எங்களய்யா முனைவர் நா.அருள்முருகன் அவர்கள் வருகிறார்கள்...
இவர்களொடு, த.இ.க. தொடர்பு நமக்குக் கிடைக்கக் காரணமான இளைஞர், கணினித்துறையில் ஆற்றலும் அனுபவமும் தொடர்ஆர்வமும் கொண்ட நம் நண்பர் நீச்சல்காரன் அவர்கள் வருகிறார்கள்..
காலை 8.30 மணிக்கு – கவிதை-ஓவியக் காட்சி திறப்புடன் தொடங்கி, மாலையில் இன்ப அதிர்ச்சியாக வரப்போகும் சில முக்கியமான நண்பர்களின் வரவு வரை தொடர் நிகழ்ச்சிகள்...5மணிக்கு விழா நிறைவடையும்.
பதிவர் அறிமுகம்- தமிழிசைப்பாடல்கள்- புத்தக வெளியீடுகள்- பதிவர் நூல் காட்சி மற்றும் விற்பனை- சிறப்புரைகள்- போட்டிகளில் வெற்றி பெற்ற பதிவர்களுக்கு ரொக்கப்பரிசும் சான்றுகளும் வழங்கல்- தமிழ் வலைப்பதிவர் கையேடு வெளியீடு-என நிகழ்ச்சிகள் 5மணிவரை தொய்வின்றித் தொடரும்..!
இதில் அனைத்து மாவட்டங்களிலிருந்தும், வெளிமாநிலங்களிலிருந்தும் சுமார் 350பேர் வருவார்கள் என்னும் எதிர்பார்ப்பில் ஏற்பாடுகள் நடந்து வருகின்றன.
ஒவ்வொரு நிகழ்வு-பணிகளுக்கும் ஒரு குழுவென 20குழுவைச் சேர்ந்த சுமார் 50பேர் இதற்கெனக் கடந்த ஒருமாதமாக உழைத்து வருகிறார்கள்..
தாங்கள் இவ்விழாவில் கலந்து கொண்டு தமிழ்வலைப்பதிவர் பயனுறவும் அதன்வழியே கணினித் தமிழ் வளரவும், முகம்தெரியாத முகநூலில் சிக்கிக் கிடக்கும் இன்றைய இளைஞர் வலைப்பக்கம் திரும்பவும் உதவ வேண்டும்!

வாசலில் நின்று வரவேற்கக் காத்திருக்கிறோம்.. வருக!
இணையத் தமிழால் இணைவோம்... வருக! வருக!!
தங்கள் வருகை எங்கள் உவகை!... வருக! வருக!! வருக!!! 

விழாக்குழுவின் சார்பில் அன்புடன் அழைக்கிறோம்....!

அன்பில் மகிழ்ந்து, ஆதரவால் நெகிழ்ந்து-
கூப்பிய கைகளுடன் தங்ளுக்காகக் காத்திருக்கிறோம்!
இவண், 
நா.முத்துநிலவன்,
(ஒருங்கிணைப்பாளர்)  
தங்கம்மூர்த்தி, இரா.ஜெயலட்சுமி, மு.கீதா, ச.கஸ்தூரிரெங்கன், பொன.கருப்பையா, கு.ம.திருப்பதி, க.குருநாதசுந்தரம், வைகறை, மீரா.செல்வக் குமார், ராசி.பன்னீர்செல்வன், பா.ஸ்ரீமலையப்பன், மகா.சுந்தர், ஆர்.நீலா, அ.பாண்டியன், மைதிலி, கா.மாலதி, த.ரேவதி, ஸ்டாலின் சரவணன், சு.மதியழகன், சு.இளங்கோ, எஸ.ஏ.கருப்பையா, தூயன், யு.கே.கார்த்தி, நாக.பாலாஜி, சு.துரைக்குமரன், நண்பா.கார்த்திக்,
சோலச்சி, சுரேஷ்மான்யா, சிவா.மேகலைவன் 
விழாக்குழு உறுப்பினர்கள் 
கணினித் தமிழ்ச்சங்கம், புதுக்கோட்டை
செல்பேசி – 94431 93293
--------------------------------------------------
இவர்களுடன்  இணைந்து 
திண்டுக்கல் பொன். தனபாலன் அவர்கள்
விழாவுக்கு ஆற்றியிருக்கும்
தொழில்நுட்ப உதவி சொல்லில் அடங்காது.

வலைப்பக்கத்தை 
மெருகூட்டித் தந்த 
சென்னைப் பதிவர் 
திருமிகு மதுமதி அவர்கள்
விழாக்குழுவின் நன்றிக்குரியவர்
இவர்களை, 
அனைத்துப் பதிவர்களும் சேர்ந்து
நமது விழாவில்
கௌரவிக்கத் திட்டமிட்டிருக்கிறோம்.
--------------------
விழாவுக்கான வலைப்பக்கம் –  http://bloggersmeet2015.blogspot.com
விழாத் தொடர்பான மின்னஞ்சல் – bloggersmeet2015@gmail.com
பி.கு. - விழாவில், அதுவரை முகமறியாத நட்புக் கொண்டிருக்கும் தமிழ் வலைப்பதிவர்களை ஓரிடத்தில் சந்திப்பதைவிட வேறென்ன மகிழ்ச்சி?
----------------------------------------------------------------- 
நண்பர்களுக்கு 
ஓர் அன்பான வேண்டுகோள்!
இதைப் படிக்கும் 
நமது வலைநண்பர்கள்
இந்த நிகழ்வை,
தம்வீட்டு நிகழ்வாக எண்ணி,
இந்த அழைப்பிதழை
தமது வலைப்பக்கத்தில் 
அன்போடு  பகிர்ந்து
அனைவரையும் அழைக்க வேண்டுகிறோம்.

17 கருத்துகள்:


  1. இந்த விபரங்களையும் பகிர்ந்து இருந்தால் அதையும் என் தளத்தில் பதிந்து இருப்பேன். எனக்கு பிடித்த இந்த கால எழுத்தாளர் எஸ்.ரா மட்டுமே அவர் வருவது மிகவும் மிக மகிழ்ச்சி பாராட்டுக்கள் உங்களுக்கும் தனபாலன் மற்றும் விழாக் குழுவினர் & புதுக்கோட்டை தமிழ் கணணி சங்கத்தினருக்கும் வாழ்த்துக்களும் அட்வான்ஸ் பாராட்டுக்களும்

    பதிலளிநீக்கு
  2. அசத்துகிறீர்கள். விழா பெரு வெற்றி பெறும் வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  3. கவிஞர் ஐயா தலைமையிலான புதுகைப் பதிவர்களுக்கு ஒரு ஓ போட்டுவிட வேண்டியதுதான்
    ஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஒஒ

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஒஒ
      :) விழாக்குழுவினர் ஒஓ வலைப்பதிவர் ஒஓ

      நீக்கு
  4. உழைப்பு வீண் போகாது. வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  5. மரியாதைக்குரியவர்களே,
    வணக்கம்.
    நம்ம புதுக்கோட்டைக்கு வருகிற 2015அக்டோபர் 11ந் தேதி அனைவரும் வாங்க..அதிசய நிகழ்வினில் மூழ்கி ஆனந்தம் பெறுக.என அன்புடன், http://konguthendral.blogspot.com

    பதிலளிநீக்கு
  6. நம் விழாவிற்கான அழைப்பிதழ் கண்டேன். புதுக்கோட்டையில் சந்திப்போம்.

    பதிலளிநீக்கு
  7. மரியாதைக்குரியவர்களே,
    வணக்கம். நானும் புதுக்கோட்டை வரும்போது இணையத்தமிழ் வளர்ச்சிக்கு என்னால் இயன்ற பங்கினை அளிக்க உள்ளேன்.சிறிய பங்காக இருப்பினும் அதாவது சிறு துரும்பும் பல் குத்த உதவும் அல்லவா!
    என அன்புடன்,
    C.பரமேஸ்வரன், 9585600733
    http://konguthendral.blogspot.com
    சத்தியமங்கலம்,
    ஈரோடு மாவட்டம் 638402

    பதிலளிநீக்கு
  8. விழா பெரு வெற்றி பெற வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  9. எஸ்.ரா உட்பட மிக முக்கியமான ஆளுமைகள் விழாவில் பங்கேற்பதறிந்து மகிழ்ச்சி. அழைப்பிதழ் கண்டேன். அருமையாய் இருக்கிறது. விழாக்குழுவினர் அனைவருக்கும் நன்றி!

    பதிலளிநீக்கு
  10. அழைப்பிதழ் அழகு. நேரம் கூடிய நிகழ்ச்சி நிரல் இருக்கும் என்றார்களே. இதையே படிக்கச் சிரமமாயிருக்கிறது

    பதிலளிநீக்கு
  11. புதுக்கோட்டைக்குப் புறப்பட்டாச்சு.

    பதிலளிநீக்கு

Related Posts Plugin for WordPress, Blogger...